சனிபகவானின் அருளை பெற்று துன்பங்களிலிருந்து விடுபட எளிய ரகசியம்

நவகிரகங்களில் சனிபகவான் முக்கியமானவர், சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள், நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஈஸ்வர பட்டத்தை அடைந்தவராவார்.
மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றால் இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்குமோ என்று அச்சப்பட தொடங்கிவிடுகின்றனர். ஆனால் சனிபகவானை குறித்து நாம் அச்சப்பட தேவையில்லை என்பதே உண்மை. நீங்கள் கஷ்டத்தின் மேல் கஷ்டங்களை அனுபவிக்கிறீர்களா பின்வரும் வழியை பின்பற்றி வாருங்கள் உங்களின் அத்தனை துன்பங்களும் உங்களை விட்டு அகலும் .

தினமும் காலை குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டுவிட்டு காகத்திற்கு ஒரு கைப்பிடி உலர் திராட்சையை அளிக்க வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் உங்களின் அத்தனை கஷ்டங்களுக்கும் தீர்வாக அமையும் .

இதை செய்யமுடியாதவர்கள் காலையில் புதிதாக வெள்ளை சோறு வடித்து நாம் சாப்பிடுவதற்கு முன் அதில் எள் சிறிதளவு கலந்து காகத்திற்கு அளித்து காகம் சாப்பிட்டதற்கு பின் நாம் சாப்பிட்டு வரலாம். இதனால் நாம் அனுபவித்துவரும் துன்பங்கள் பனிபோல விலகும். காகங்களுக்கு உணவளிப்பதன் மூலம் சனிபகவானின் அருள் மட்டுமல்லாது நம் முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைத்து வாழ்வில் முன்னேற உதவும்.

கால்கள் ஊனமுற்ற மாற்று திறநாளிகளுக்கு இயன்ற உதவியைச் செய்வதன் மூலம் சனிபகவானின் மனதை குளிர்விக்க முடியும்.

சனிபகவான் மனிதர்கள் மட்டுமின்றி தெய்வங்களையும் பிடித்து கஷ்டம் கொடுப்பார் என்று புராணங்கள் கூறுகிறது. ஆனால் சனிபகவானால் கூட பிடிக்க முடியாதவர் விநாயகப்பெருமான் மட்டுமே. எனவே விநாயகர் வழிபாட்டை தவறாமல் செய்துவந்தால் சனிபகவானின் ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம்.

அனுமன் வழிபாட்டை சனிக்கிழமைகளில் செய்துவருவதுடன் அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபட்டு வந்தால் நன்மைகள் ஏற்படும்.

மேலும் சனிபகவான் துளியும் கடமை தவறாதவர் என்று ஆன்மிக அருளாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் செய்த பாவக்கனக்குகளுக்கு ஏற்றவாறே உங்களுக்கு சனிபகவான் துன்பங்களை அளித்து உங்களை பாவக் கணக்கிலிருந்து விடுவித்து முக்திக்கு வழிகாட்டுவார் என்று புராணங்கள் கூறுகின்றது. நீங்கள் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு வருவீர்களானால் சனிபகவானை கண்டு நீங்கள் அச்சப்படவேண்டியதே இல்லை. எனவே இயன்ற அளவு எவருக்கும் தீங்கிழைக்காமல் புண்ணியங்கள் சேர்பதே எல்லா துன்பங்களுக்கும் தீர்வாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*