சிக்கலில் சிக்கிய தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’!

தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’ பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் ட்யூன் திருட்டு என்ற நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளது.

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சும்மா கிழி’இன்று மாலை வெளியானது. ரஜினியின் வசனத்துடன் தொடங்கும் சும்மாகிழி என்ற இந்த பாடல், தொடக்கத்தில் அண்ணாமலை படத்தில் வரும் வந்தேண்டா பால்காரன் இசையோடு தொடங்கி பின்னர் ரஜினியின் ஆஸ்தான தொடக்க பாடல்களை பாடும் எஸ்.பி.பி நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு – சும்மா கிழி என உரத்த குரலில் ஒலிக்கிறது.

வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்த இப்பாடல் தற்போது வரை 25 லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். வெளியானது முதல் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கும் இப்பாடலுக்கும் இதன் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.எஸ்.பி.பி பாடியிருக்கும் ‘சும்மா கிழி’ பாடலும் பிரபல ஆன்மிக பாடகர் ஸ்ரீ ஹரி பாடியிருக்கும் ‘கட்டோட கட்டும்புடி பள்ளிக்கட்ட சொமந்தபடி’ என்ற ஐயப்பன் பாடலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கதை திருட்டு சர்ச்சை தமிழ் திரையுலகில் மிக பெரும் விவகாரமாக இருந்து வரும் நிலையில் தற்போது ட்யூன் திருட்டு என்ற பெயரில் இசையமைப்பாளர் அனிருத்தை கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*