பிரபல நடிகரும், காமெடியனுமான மதுரை முத்து தன்னுடைய முதல் மனைவி நான் கஷ்டப்பட்ட போது, என்னுடன் இருந்தாள், ஆனால் இப்போது நான் நன்றாக இருக்கும் போது இல்லை, எனக்காக அந்த விஷயம் எல்லாம் செய்தாள் என்று கண்கலங்கிய படி கூறியுள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் தன்னுடைய காமெடி மூலம் மிகவும் பிரபலமானவர் தான் மதுரை முத்து. இவர் தன்னுடைய காமெடி மூலம், பலரையும் சிரிக்க வைத்துள்ளார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் மனைவி தன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை கூறியுள்ளார்.
முதல் மனைவியுடன் முத்து அதில், நான் அவர்களை பத்து நிமிடம் தான் முதலில் பார்த்தேன், பார்த்தவுடனே திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னுடைய குடும்பத்தில் அதிக கஷ்டம் இருக்கிறது. நீங்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்றார், அதுமட்டுமின்றி அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வேறொரு பெண்ணுடன் ஓடிவிட்டார். குழந்தையோடு இருந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். என்னில் பல விஷயங்களை மாற்றியது அவர் தான், என் குடும்பம் கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கும் குடும்பம், குழந்தை இருக்கும் என்னை எப்படி உங்கள் வீட்டில் ஏற்று கொள்வார்கள் என்றார்.
அவர் சம்மதம் தெரிவித்த இரண்டே மாதத்தில் திருமணம் செய்தோம். அதன் பின் என் வாழ்க்கையில் இப்போது சொந்தமாக வீடு இருக்கிறது, கார் இருக்கிறது, இதை எல்லாம் அவர் அப்போது என்னிடம் சொன்னார். அதிக பக்தி கொண்டவர், சதுரகிரி மலைக்கு எல்லாம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது ஏறினார். என்னை ஒரு நல்ல மனிதன், சமுதாயத்தில் ஒரு இடத்தில் கொண்டு வருவதற்காக அப்படி செய்தார். மதுரையிலே நீங்கள் தான் பெரிய வீடாக கட்ட வேண்டும் என்று கூறினார். வீட்டோட பிரச்சனைகள் எதுவுமே எனக்கு தெரியாமல் பார்த்து கொள்வார், ஒரு நகைச்சுவை கலைஞனுக்கு எதுவும் தெரியாமல் இருந்தால் தான், அவன் காமெடி எல்லாம் செய்ய முடியும்.
அப்படி எல்லாம் என் வாழ்க்கையில் பயணித்தவர் இப்போது இல்லை என்ற போது வருத்தமாக இருக்கிறது. நான் ஒரு மிகப் பெரிய விபத்தில் சிக்கினேன். இதனால் 12 தையல் போட வேண்டியிருந்தது. அப்போது என்னை பார்க்க வந்தவர்கள் அனைவரும், நீ பலரையும் சிரிக்க வைத்ததால், உயிர் பிழைத்தீர்கள் என்று கூறினர். ஆனால் அப்போது என் மனைவி, எனக்காக கொஞ்சமும் யோசிக்காமல் கடவுளுக்காக மொட்டையடித்து வந்தார். பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார், முடி அவ்வளவு இருக்கும், ஆனால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் அவர், பழனி முருகனிடம் என் வீட்டுக்காரர் பிழைத்தால் மொட்டையடித்து கொள்கிறேன் என்று வேண்டியுள்ளார்.
அதை நிறைவேற்றியுள்ளார். இப்படி எதையும் துணிந்து செய்யும் குணம் கொண்டவர். இப்படிப்பட்டவருக்கு நான் அமெரிக்காவில் இருக்கிறேன், அப்போது அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் வருகிறது. ஆனால் பாஸ்போர்ட் போன்ற பிரச்சனை காரணமாக, நான் இரண்டு தினங்கள் தாமதமாக வந்து தான் அவளைப் பார்த்தேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். மதுரை முத்துவின் முதல் மனைவி கடந்த 2016-ஆம் ஆண்டு கோவிலுக்கு சென்று திரும்ப்போது விபத்தில் சிக்கி பலியானார். அதன் பின் சில மாதங்கள் கழித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.