அத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா?

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியில் வரும் அத்தி வரதர் வைபவம் ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களுக்கு நடைபெறுவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைமுறையாகும். அந்த வகையில் கடந்த நூற்றாண்டில் 1937 மட்டும் 1979 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, 21 ஆம் நூற்றாண்டில் முதல் அத்தி வரதர் தரிசனம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு கிட்டியது. சிறப்பு வாய்ந்த இந்த அத்தி வரதர் தரிசனம் நேற்றுடன் முடிவடைந்து இன்றைய தினம் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்தி வரதர் சிலையை திருக்குளத்தில் வைக்கப்படுவது குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பலரும் கண்டு களித்த அற்புத அத்தி வரதர் தரிசனம் முடிந்து, அத்திவரதர் திருவுருவச் சிலையை குளத்திற்குள் வைக்க படுவதற்கான சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்படும் முறையைப்பற்றி கோயிலின் அர்ச்சகர் ஒருவர் விரிவாக எடுத்துரைத்தார். 47 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில் இன்று அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட இருக்கிறார். காலை மற்றும் மாலை வேளைகளில் கோயில் மூலவர் மற்றும் அத்தி வரதருக்கு நித்தியப் பூஜைகள் செய்யப்படும். இரவு 10 மணிக்கு மேல் தைல காப்பு அணிவிக்கப்படும். தைல காப்பு என்பது பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்திவரதர் சிலை முழுவதும் பூசப்படும்.

அத்தி வரதர் சிலை பால் வகை மரமான அத்தி மரத்திலான சிலை என்பதனால் அதை தண்ணீருக்குள் வைக்கும்போது அடுத்த 40 ஆண்டுகள் வலுவாக இருக்க வேண்டும். எனவே அறிவியல் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பார்த்தோம் என்றால் 40 ஆண்டுகளுக்கு தண்ணீருக்குள் வரதர் சிலை இருக்கும்போது அச்சிலை அருகே மீன், ஆமை போன்ற நீர் வாழ் உயிரினங்கள் போன்றவையெல்லாம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

அவை சிலை மீது உரசும் போது சிலைக்கு சேதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே மேலே சொல்லப்பட்ட மூலிகை தைலங்கள் சிலைக்கு பூசப்படுவதால் மீன், ஆமை போன்றவை சிலைக்கு அருகே செல்லாது. இன்று மாலை நித்தியப்படி பூஜைகள், முடிந்தபிறகு அத்திவரதருக்கு புதுபட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும்.

இன்றிரவு 10 லிருந்து 12 மணிக்குள்ளாக அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் சிலை சயன நிலையில் வைக்கப்படும். குளத்தின் பாதாள அறையில் செங்கல் தரையில் தான் அத்திவரதர் சயனம் கொண்டிருப்பார். சிலையின் தலைக்கடியில் கருங்கல் இருக்கும். சிலை வைக்கப்படும்போது சில தாந்திரீக, மந்திர முறைகள் செய்யப்படும் என்பதால் கோயில் அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் அந்த பாதாள அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இப்போது தரிசனம் செய்து இருக்கிறார்கள். நேரில் வந்து தரிசனம் செய்ய முடியாதவர்கள் தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் மன நிறைவாக கண்டனர். அடுத்த 40 ஆண்டுகளுக்கு அக்குளத்தில் சயனம் கொள்ளும் அத்தி வரதர் 2059 ஆம் ஆண்டு ஜூலை / ஆகஸ்ட் மாத காலங்களில் மீண்டும் குளத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*