கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன் பட்டவர்களின் நெஞ்சம் படும் துயரத்தை கம்பர் கம்ப ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன் தொல்லை ஏற்பட்டுவிட்டால் மனிதனின் மனம் நிம்மதி குறைந்து அல்லலுற நேரிடுகிறது. கடன்தொல்லையில் இருந்து விடுபட சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து நரசிம்மர் ஆலயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் போதும் எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை அடையலாம்.
இந்த ஐந்து கோயில்களும் அமைய முக்கிய காரணம் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாராவார்.
திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண வேண்டுதல் மேற்கொண்டார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள்.
1. திருமால் இரண்யனை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்து முடித்த பின் சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் தேவர்களும், ரிஷிகளும் நரசிம்மரின் சினத்தை தணிக்குமாறு லட்சுமி தேவியை வேண்டினார்கள். இவர்களின் வேண்டுதலை ஏற்ற லட்சுமி தேவி நரசிம்ம பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் சினம் தணிந்து ஆலிங்கனம் (அணைத்தல்) செய்தார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊரில் லட்சுமி நரசிம்மர் தோற்றத்தில் இருக்கும் பெருமாள் வரதராஜ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
2. குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாளாக கட்சி தரும் நரசிம்ம பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தாலும் முகத்தில் அதீத கோபத்தை காட்டவில்லை.
3. மங்கை மடத்தில் உள்ள ஆலயத்தில் பெருமாள் வீர நரஸிம்ம பெருமாளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
4. திருநகரியில் உள்ள ஆலயத்தில் பெருமாள் பக்தர்களுக்கு ஹிரண்ய நரஸிம்ம பெருமாளாக அருள்பாலிக்கிறார்.
5. திருநகரியின் அதே ஆலயத்தில் பெருமாள் பக்தர்களுக்கு யோக நரஸிம்ம பெருமாளாக அருள்பாலிக்கிறார்.
ஒரு சில கிலோமீட்டர் வித்தியாசத்தில் அருகருகே அமைந்துள்ள இந்த ஐந்து நரசிம்மர் ஸ்தலங்களையும் ஒரே நாளில் தரிசித்து தனது கடன் சுமை தீரவேண்டும் என்று வழிபட்டால் கடன் சுமை விரைவில் தீரும் என்பது நிதர்சனம்.